கவிஞனில்லை கவிபாட
அரசியல் அறிஞனில்லை
தத்துவம் சொல்ல - சிறு
சேதியொன்று சொல்வதற்கே
சிங்கார வரிகள் செய்து -பல
சிந்தனைகள் செருகி வைத்து -தமிழ்
வார்த்தைகளால் விளையாட -வைர
முத்துவும் தான் இல்லை நான்!
ஆனாலும்...
ஆற்றுப்பெருக்காய்
ஊற்றெடுக்கும் உற்சாகத் திமிரும்,
காட்டுத்தீயாய்
கட்டித்தாவும் கற்பனையும்
அகண்ட கடலின் ஆழம் போல்
அடங்காத் திரியும் வேழம் போல்
அசாத்திய தன்னம்பிக்கையும் கொண்டு ...
சிறுகச் சிறுக
சேர்த்துச் சேர்த்து
எனக்குள் நானே
செதுக்கிக் கொண்ட- மிகச்
சாதாரண மனிதன் நான்.
கற்றவை வித்தையென்றால்
கவிதை போல் கத்திவிடலாம்.
ஏன் மெட்டுக் கூட கட்டி
பாடியும் விடலாம்.
ஆனாலும்...
பட்ட அனுபவங்களின்
சுட்ட உண்மைகளை - என் மீது
புடமாய்ப் போட்டுப் போட்டு
பட்டைகளாய்த் தட்டித் தட்டி
அதிர்வுகளாய்...ஆனந்தங்களாய்...
அனைத்து நரம்புகளிலும்
உள்வாங்கிய
அழகுகள் அவையல்லவா ?
கண்ணாடியால் கட்டிடங்கள்
கட்டிக் கட்டி உயர்ந்து உயர்ந்து
கற்பனையில் மாய்ந்து போகும்
மானுடர்கள் மத்தியிலே
ரத்தத்திலே அன்பைத் தோய்த்தெடுத்து-அதில்
உணர்வுகளை உருக்கி ஊற்றி
வைரமாய் என் மனத்தை
வடித்தல்லவா வைத்திருக்கிறேன் !
ஆனாலும்...
எதிர்படும் ஒளியைப்
பன்மடங்கொளியாய்
எதிராய் ஒளிப்பேன்
என்பதைத் தவிர என்னிடமென்ன ...?
நான் ஒரு கரிதான்!
Friday, March 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment